சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசிக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் காலை குரோம்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் இருக்கும் காந்தி சாலை சந்திப்பில் ஸ்ரீதர் காரை வேகமாக ஓட்டி சென்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்ரீதரின் கார் முன்னால் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதியது. இதனால் சிக்னலுக்கு நின்ற கார் அதற்கு முன்னால் நின்று கொண்டிருந்த சினிமா நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் மீது அடுத்தடுத்து மோதியதால் ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து அறிந்த போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்க முயன்ற போது ஸ்ரீதர் ஓட்டி வந்த காரின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்ததும் ஸ்ரீதரின் குடும்பத்தினர் காரிலிருந்து கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் போலீசார் அந்த வழியாக வந்த தண்ணீர் லாரியை மடக்கி காரின் முன் பகுதியில் ஏற்பட்ட தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.