கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காடியார் கிராமத்தில் விவசாயியான ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அன்னபூரணி என்ற மனைவியும், சந்தோஷ என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு விவசாய நிலத்திற்கு மருந்து அடிப்பதற்காக மூன்று பேரும் சென்றனர். அதன் பிறகு அவர்கள் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினரும், உறவினர்களும் அவர்களை தேடி பார்த்தனர்.

அதே பகுதியில் இருக்கும் விவசாய நிலத்தில் 3 பேரும் சடலமாக கிடந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த பகுதியில் பன்றிகளுக்காக சட்டவிரோதமாக போடப்பட்ட மின்வேலியில் அவர்கள் உயிரிழந்தார்களா? அல்லது முன் விரோதம் காரணமாக யாராவது கொலை செய்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.