கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அக்காள், தங்கையான 2 சிறுமிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் அரசு பேருந்தில் வால்பாறைக்கு வந்தனர். அந்த பேருந்து கருமலை எஸ்டேட்டை சுற்றி வரும். இதனால் சிறுமிகள் 40-வது கொண்டை ஊசி வளைவில் இறங்கி மற்றொரு அரசு பேருந்தில் ஏறுவதற்காக அய்யர்பாடி ரோப்வே எஸ்டேட் பகுதியில் இருக்கும் பயணிகள் நிழற்குடையில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது கல்லாறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த முகமது ஷெரீப், ரிசாத், பாலாஜி ஆகிய 3 வாலிபர்களும் குடிபோதையில் இரண்டு சிறுமிகளுக்கும் பாலியல் தொந்தரவு அளித்து தகாத முறையில் நடந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமிகள் கத்தி கூச்சலிட்டதால் மூன்று பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முகமது ஷேரிப், பாலாஜி ஆகிய இருவரையும் கைது செய்தனர். தப்பிய ரிசாத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.