கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையத்தில் இருக்கும் பாம்பலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. அப்போது காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து ஊர்வலமாக வர முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் உள்ளூரை சேர்ந்தவர்கள் மேளம் அடிக்க வேண்டும் என அதே பகுதியில் வசிக்கும் கனகராஜ் கூறியுள்ளார். அதற்கு மோகன்ராஜ், சரவணன், பூபதி ஆகியோர் வெளியூரிலிருந்து நாங்கள் மேளம் கொண்டு வந்துள்ளோம். அதைத்தான் அடிக்க வேண்டும் என கூறி தகராறு செய்துள்ளனர்.

அப்போது கோபமடைந்த மோகன்ராஜ், பூபதி, சரவணன் ஆகிய 3 பேரும் கனகராஜை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக தெரிகிறது. இதனால் காயமடைந்த கனகராஜ் வெள்ளம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சரவணன், மோகன்ராஜ், பூபதி ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.