கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காட்டை சேர்ந்த சமீர்(30), கிஷோர்(23), திலீப்(23) ஆகிய மூன்று பேரும் சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் துணை நடிகர்களாக நடித்து வருகின்றனர். நேற்று 3 பேரும் பாலக்காட்டில் இருந்து ஊட்டி செல்வதற்காக காரில் கோவைக்கு வந்து கவுண்டம்பாளையம் பகுதியில் வைத்து மது அருந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த வழியாக சென்ற அன்பு என்பவர் நடுரோட்டில் நின்று மது அருந்தியது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது திலீப், சமீர், கிஷோர் ஆகிய மூன்று பேரும் கைகலப்பில் ஈடுபட்டு காரில் இருந்த துப்பாக்கியை காட்டி சுட்டுவிடுவோம் என அன்புவை மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து அன்பு துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில் 3 பேரும் சினிமாவில் பயன்படுத்தும் பொம்மை துப்பாக்கியை காட்டி வாலிபரை மிரட்டியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் 3 பேரையும் கைது செய்ததோடு, சினிமா துப்பாக்கி, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.