கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் லோகேஸ்வரன் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று மாலை லோகேஸ்வரன் பள்ளி முடிந்ததும் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சுக்கு சென்றுள்ளான். அங்கு சவாரி செல்லும் குதிரையின் அருகே சென்ற போது குதிரை லோகேஸ்வரனை கடித்தது. இதனால் அச்சத்தில் சிறுவன் அங்கிருந்து ஓடினான். ஆனாலும் குதிரை விடாமல் துரத்தி சென்று சிறுவனை கடித்ததோடு காலால் உதைத்தது. இதே போல் சில்வர் பீச்சில் பஜ்ஜி கடை நடத்தி வரும் பத்மாவதி, சொக்கலிங்கத் தெருவை சேர்ந்த தேன்மொழி ஆகியோரையும் குதிரை கடித்தது.

இதனை பார்த்த பொதுமக்கள் கல் மற்றும் கட்டையால் குதிரையை சரமாரியாக தாக்கியதில் அந்த குதிரை உயிரிழந்தது. இதற்கிடையே காயமடைந்த லோகேஸ்வரன் உள்பட 3 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் குதிரையின் உரிமையாளரான கடலூர் புதுப்பாளையத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.