ஈரோடு மாவட்டத்தில் உள்ள இண்டியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகரடு பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சாலையோர சீரமைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. நேற்று காலை அந்த பகுதியில் வசிக்கும் 26 பேர் வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக எங்கிருந்தோ வந்த தேனீக்கள் 26 பேரையும் விரட்டி விரட்டி கொட்டியது.

இதனால் காயமடைந்த 26 பேரும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து சிகிச்சை முடிந்து 25 பேர் வீடு திரும்பிய நிலையில் ஒருவர் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.