பொதுவாகவே வேலைக்கு செல்லும் அனைவருமே வார விடுமுறையை எதிர்நோக்கி காத்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் கடந்த 26 ஆண்டுகளாக ஒரு நாள் மட்டுமே விடுமுறை எடுத்து பலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளார் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவர். உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தேஜ் பால் சிங் என்பவர் தனியார் நிறுவனத்தில் கிளர்க்காக பணியாற்றி வருகின்றார். கடந்த 26 ஆண்டுகளில் ஒரே ஒரு நாள் மட்டுமே விடுப்பு எடுத்ததற்காக இவர் india book of record சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

வேலையில் விடுமுறை எடுக்காதது மட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமைகள், பண்டிகை நாட்கள் மற்றும் அலுவலகம் விடுமுறையின் போதும் இவர் பணியில் இருந்துள்ளார். இப்படி ஓயாது பணியாற்றி வந்த இவர் ஒரே ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்துள்ளார். அதாவது கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் 2003 ஆம் ஆண்டு ஒரே ஒரு நாள் மட்டும் தனது சகோதரியின் திருமணத்துக்காக விடுமுறை எடுத்துள்ளார். மற்றபடி வருடத்திற்கு நிறுவனமே அளிக்கும் 45 நாள் விடுமுறையின் போதும் இவர் பணிக்கு வந்தது மட்டுமல்லாமல் இதுவரை ஒரு நாள் கூட தாமதமாகவும் வேலைக்கு வந்ததில்லை.