இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் தர்மசாலாவில், பாராகிளைடிங் செய்யும் போது நிகழ்ந்த பேரழிவான விபத்தில், குஜராத்தைச் சேர்ந்த 25 வயது சுற்றுலாப் பயணி சதீஷ் உயிரிழந்தார். அகமதாபாத்தை சேர்ந்த சதீஷ், தனது குடும்பத்துடன் சுற்றுலாவாக தர்மசாலா வந்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில், பாங்கோட்டுவில் இருந்து பாராகிளைடிங் செய்யும்போது, அவர் மற்றும் அவரது விமானி கீழே விழுந்தனர்.
இதில், சதீஷ் பலத்த காயங்களுடன் தர்மசாலா மண்டல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், காங்க்ராவில் உள்ள டாண்டா மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் அடிப்படையில், சதீஷ் பறந்த தளம் அரசு அங்கீகாரம் இல்லாத இடம் என்பது தெரியவந்துள்ளது. இது இமாச்சலப் பிரதேச ஏரோ-ஸ்போர்ட்ஸ் விதிகள் 2022-ஐ மீறுவதாகும்.
Still don’t get how people trust adventure sports in India. Another life lost in Indrunag Dharamshala — 25 year old Satish from Gujarat. Just months ago a 19 year old girl lost her life at the same spot. The site was closed till September, but flights were still taking place. pic.twitter.com/fPv4XujHzf
— Nikhil saini (@iNikhilsaini) July 14, 2025
மேலும், உயர்நீதிமன்ற உத்தரவு படி, ஒரு இன்ஸ்பெக்டர் இல்லாமல் எந்த தளத்திலிருந்தும் விமானம் பறக்க முடியாது. ஆனால் சம்பவ இடத்தில் எந்தத் தனிப்பட்ட பாதுகாப்பு அலுவலரும் இல்லை என்று காங்க்ரா மாவட்ட சுற்றுலா அதிகாரி வினய் திமான் தெரிவித்துள்ளார். இது ஏற்கனவே ஜனவரி மாதத்திலும் 19 வயது சிறுமி ஒருவர் இறந்த சம்பவத்தை நினைவுபடுத்துகிறது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான கவலைக்குரிய இந்த சம்பவம், பாராகிளைடிங் செய்யும் முன் ஏற்க வேண்டிய முன்னெச்சரிக்கைகளை முன்வைக்கிறது. பாராகிளைடிங் செய்யும் இடம் அரசாங்க அங்கீகாரம் பெற்றதா என்று சரிபார்க்க வேண்டும். அனுபவமுள்ள விமானியுடன் மட்டுமே பறக்க வேண்டும்.
வானிலை தெளிவாக இல்லாவிட்டால் பாராகிளைடிங் தவிர்க்க வேண்டும். ஹெல்மெட், பெல்ட், கையுறைகள், பாராசூட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் சரியானவையா என்பதை உறுதி செய்ய வேண்டும். உடல்நிலை சரியில்லாத நிலையில் இந்த விளையாட்டில் ஈடுபடக் கூடாது. சதீஷின் உயிரிழப்பு, போதுமான கட்டுப்பாடுகள் இல்லாததால் ஏற்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
