சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ தற்போது வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “24 மணி நேரத்தில் ₹60,000 மற்றும் ஒரு மாதத்தில் ₹10 லட்சம்” சம்பாதிக்க உதவும் ஒரு முதலீட்டுத் திட்டத்தை அரசு ஊக்குவிப்பதாகக் கூறுவதாகக் காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோ பலரையும் ஈர்த்த நிலையில், இது தகவல் தவறான மற்றும் போலியான செய்தி என்று பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு (Fact Check) உறுதி செய்துள்ளது. இந்த வீடியோ, நிர்மலா சீதாராமனின் உருவத்தைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் மாற்றியமைக்கப்பட்ட ஒன்றாகும்.

இந்த வீடியோ முற்றிலும் தவறானது மற்றும் மக்களைத் திசைதிருப்பும் நோக்கம் கொண்டது என்று PIB எச்சரித்துள்ளது. “மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், எளிதாக தினசரி வருமானம் ஈட்ட உதவும் எந்தவொரு ‘முதலீட்டுத் திட்டத்தையும்’ தொடங்கவோ அல்லது அங்கீகரிக்கவோ இல்லை” என்று PIB Fact Check தனது அதிகாரப்பூர்வ ‘X’ (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், “திடீரெனப் பணக்காரர் ஆகலாம் என்று கூறும் இதுபோன்ற மோசடி வலைகளில் சிக்கிவிடாதீர்கள்! விழிப்புடன் இருங்கள். தகவலைப் பகிர்வதற்கு முன், அதன் உண்மையைச் சரிபார்க்கவும்” என்றும் PIB பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.