தி.மு.க. அரசு தங்கள் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க, சமூக ஊடகங்களில் உள்ள இன்ஸ்டால் பிரபலங்கள் (Influencers) மூலமாக விளம்பரப்படுத்தி, அவர்கள் அனைவரும் ஒத்தக் கருத்துகளைப் பேசுவது போன்ற பிரமோஷன் பணிகளில் ஈடுபடுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன.

இதில் உள்ள முக்கியப் பிரச்சினை என்னவென்றால், இந்த பிரபலங்கள் தாங்கள் பணம் வாங்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறோம் என்பதை எங்கும் வெளிப்படுத்துவதில்லை. மாறாக, இது உண்மையிலேயே அரசின் நல்ல திட்டம் என்று மக்கள் நம்புவதற்கு ஏற்ற வகையில் ஒரு சாதாரண மக்களின் கருத்தாகவே திணிக்கப்படுகிறது. இதனால், விளம்பரம் எது, உண்மை எது என அறியாமல் மக்கள் குழப்பமடையும் நிலை உள்ளது.

இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகமும் (த.வெ.க.) இதேபோன்ற ஒரு விளம்பரப் பாணியைக் கையாண்டிருப்பது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தின் பிரமோஷன் காட்சியை அடிப்படையாகக் கொண்டு, ஒரே வசனத்தை வைத்துப் பலரும் வீடியோக்களைப் பதிவிட்டுள்ளனர். 

அந்த வீடியோவில், “2026-ல் யாரைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்யப் போகிறீர்கள்?” என ஒருவர் சிம்பு பாணியில் கேட்க, அதற்குப் பதிலளிப்பவர் நெல்சன் பாணியில், “வேறு யாரு, ஒன்று திமுக இல்லை என்றால் அதிமுக, இவர்கள் யாராவது ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்க வேண்டியது தான்” எனக் கூறுவார். 

உடனே சிம்பு பாணியில் மீண்டும், “தளபதி விஜய் அவர்களுக்கு போடுங்க, தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் நல்லா பார்த்துப்பாரு” என ஒரே வசனத்தை பலர் திரும்பத் திரும்பப் பதிவிட்டிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைக் கவனித்த நெட்டிசன்கள், “தி.மு.க. எந்த உத்தியைக் கையாண்டதோ, அதே பாணியைத்தான் த.வெ.க.வும் பின்பற்றுகிறது. ஒரே வசனம், ஒரே காட்சி – இதுவும் ஒரு விளம்பரம்தான். மக்கள் அறியாமையில் இருக்கிறார்கள்” என விமர்சித்து வருகின்றனர்.