நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் காத்து கிடந்தனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி 2000 மற்றும் 200 ரூபாய் புதிய நோட்டுக்களை வெளியிட்டது.

இதனை தொடர்ந்து கடந்த ஆறு வருடங்களாக புதிய 2000, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. தற்போது புழக்கத்தில் இருக்கும் 2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் வருகின்ற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்கு பிறகு புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மே 23ஆம் தேதி முதல் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றலாம் என அரசு அறிவித்தது. இதனால் மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை ஷாப்பிங் மற்றும் பெட்ரோல் என பல வகைகளில் செலவு செய்து வருகிறார்கள். மறுபுறம் புத்திசாலித்தனமாக யோசித்த சிலரோ வியாபாரத்தை பெருக்கியுள்ளனர். 2000 ரூபாய் நோட்டை வைத்து கறி வாங்கினால் 2000 ரூபாய்க்கு 2100 மதிப்புள்ள கறி கிடைக்கும் என கடைக்காரர் ஒருவர் விளம்பரம் செய்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.