சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் திருவள்ளுவர் சிலையில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது சொந்தமான இடத்தை விற்று பெரும் தொகையை வைத்துள்ளார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம் 152-வது வார்டு திமுக கவுன்சிலரான பாரதியும், அவரது தோழி வனிதாவும் தனசேகரிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளனர். ஆனால் கூறியபடி வட்டி மற்றும் அசலை கொடுக்கவில்லை.

இதுகுறித்து தனசேகரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பெண் கவுன்சிலர் உட்பட 2 பேரும் இரண்டு மாதத்தில் பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாக எழுதி கொடுத்தனர். ஆனால் தற்போது வரை பணத்தை கொடுக்கவில்லை. இதுகுறித்து மீண்டும் தனசேகரன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.