திருப்பூர் மாவட்டத்திலுள்ள காலேஜ் ரோடு அணைப்பாளையம் பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு வாலிபர்கள் ரயில் மோதி இறந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன்(22), விஜய்(25) என்பது தெரியவந்தது.

இவர்கள் திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். விடுமுறை தினத்தை முன்னிட்டு பாண்டியன், விஜய் உள்ளிட்ட நண்பர்கள் ரயில் தண்டவாளம் பகுதிக்கு சென்று ரயில் வரும்போது செல்பி எடுக்க வேண்டும் என முடிவு செய்தனர். அப்போது பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதால் விஜயும், பாண்டியனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.