கரூர் மாவட்டத்தில் உள்ள பழைய ஜெயம்கண்டம் பகுதியில் பாரதி-புஷ்பா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் சினேகா கடந்த 2 ஆண்டுகளாக அதே பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த பெற்றோர் சினேகாவிற்கு தேவச்சி கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த சூர்யா என்பவரை திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் புதுமண தம்பதியினர் தேவசி கவுண்டன்புதூரில் குடும்பம் நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் தனது காதலிக்கு திருமணமானது கார்த்திக்கிற்கு தெரியவந்தது.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கார்த்திக் தனது அண்ணன் சக்திவேல் என்பவருடன் காரில் அங்கு சென்று பிரச்சனை செய்து சினேகாவை அங்கிருந்து காரில் கடத்தி சென்றார். இதனை தடுக்க முயன்ற சூர்யாவின் தந்தை பழனிசாமி, தாய் புஷ்பா ஆகிய இருவரையும் அவர்கள் அரிவாளால் தாக்கினர். இதனால் படுகாயமடைந்த இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கார்த்திக் சக்திவேல் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.