தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் காந்திநகரில் கர்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடத்தூர் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கு விக்னேஷ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷாசிகா(10) என்ற மகளும், பிரம்மபுத்திரன்(4) என்ற மகனும் இருந்துள்ளனர். நேற்று மாலை கர்ணன் தனது மகள் மற்றும் மகனுடன் மோட்டார் சைக்கிளில் கடத்தூர் மின்வாரிய அலுவலகம் அருகே சாலையோரம் இருந்த பழக்கடையில் வீட்டிற்கு தேவையான பழங்களை வாங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக சென்ற தனியார் கல்லூரி பேருந்து எதிரே வந்த தனியார் பேருந்து மீது உரசி பழக்கடைக்குள் புகுந்ததால் கர்ணன், ஷாசிகா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் பிரம்மபுத்திரன், கடையில் இருந்த சண்முகம், அனிஷ், லட்சுமணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கர்ணன் மற்றும் ஷாசிகாவின் உடல்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தனியார் கல்லூரி பேருந்து டிரைவர் பிரபாகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.