இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடற்கரைக்கு 2 அகதிகள் வந்ததில், ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றொரு அகதி ராமேசுவரம் நகர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு இலங்கையில் இருந்து வந்ததாக சரண் அடைந்தார். இதனை தொடர்ந்து அவரிடம் கியூபிரிவு மற்றும் தனிப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் இலங்கை மன்னார் மாவட்டம் தோட்டவேலி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (57), இவரது மகன் சிந்துஜன்(25) என தெரியவந்தது. இவர்கள் இருவரும் கடந்த 18-ந் தேதி தனுஷ்கோடி கடற்கரையில் வந்து இறங்கியுள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்து ராமேசுவரம் வந்து பேருந்தின் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் அகதிகள் முகாமில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து மண்டபம் முகாமிற்கு சென்று அகதிகளாக பதிவு செய்ய வேண்டும் என உறவினர்கள் தெரிவித்ததை தொடர்ந்து இருவரும் மண்டபம் அகதிகள் முகாமுக்கு புறப்பட்டு சென்றனர். இதில் சிந்துஜன் மீது இலங்கையில் ஏற்கெனவே திருட்டு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது. இதனால் ராமேசுவரம் வந்தால் போலீசார் கைது செய்து விடுவார்கள் என அச்சமடைந்து  மதுரையிலேயே இறங்கி சென்று விட்டதாகவும், தான் மட்டும் இங்கு வந்ததாகவும் செல்வராஜ் விசாரணையில் தெரிவித்துள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.