கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காக்கபாளையத்தில் கட்டிட வேலை பார்க்கும் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தீபக் குமார்(10), வெற்றிவேல்(8) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தீபக்குமாரும், வெற்றிவேலும் அப்பகுதியில் இருக்கும் குட்டையில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் சிறுவர்கள் வீட்டிற்கு வராததால் பெற்றோர் அங்கு சென்று பார்த்தனர்.

அப்போது கரையில் சைக்கிள் மற்றும் உடைகள் மட்டுமே கிடந்தது. இதனால் சந்தோஷ்குமார் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் குட்டைக்குள் இறங்கி தண்ணீரில் மூழ்கிய தீபக்குமார் மற்றும் வெற்றிவேல் ஆகிய இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர் இரண்டு பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.