தென்காசி மாவட்டம் குறிஞ்சாங்குளம் என்ற கிராமத்தில் வசிப்பவர் ரகுராம். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் ஒன்று கழுகுமலை அருகே உள்ள காலாங்கரைபட்டி என்ற கிராமத்தில் உள்ளது. அங்கு சுமார் 2 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்ததை தனலட்சுமியின் தந்தை கணபதி (60) பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் மக்காச்சோளத்தை அறுவடை செய்வதற்காக  எந்திரம் மூலம் பணிகள் நடைபெற்றது. அப்போது எந்திரத்தில் தீடீரென தீப்பொறி வந்ததால் மக்காச்சோள பயிர்கள் மீது விழுந்தது. பின் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவி, அங்கிருந்த பயிர்கள் கொழுந்து விட்டு எரிந்தது.

இது பற்றி தகவலறிந்த தீயணைப்பு சிறப்பு அதிகாரி மலையாண்டி (போக்குவரத்து) தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இருப்பினும், மக்காச்சோள பயிர் எரிந்து நாசமாகியதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நாசமாகிய பயிர்களை கிராம நிர்வாக அதிகாரி விஜயா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.