திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை “குட்டி கொடைக்கானல்” என அழைக்கப்படுகிறது. இங்கு இருக்கும் 15-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் மா, பலா, வாழை, மிளகு உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து தென்மலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை விஜயகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக சேகர் என்பவர் பணியில் இருந்துள்ளார். அந்த பேருந்தில் 13 பேர் பயணம் செய்துள்ளனர். இதனையடுத்து சிறுமலை மலைப்பாதையின் 18-வது கொண்டை ஊசி வளைவு, குட்டக்காடு என்ற பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது காட்டெருமை குறுக்கே வந்தது.

அதே நேரம் சாரல் மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக காட்டெருமை சரியாக தெரியாததால் டிரைவர் பேருந்தை திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர், கண்டக்டர் உள்பட 15 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த வாகன ஓட்டிகள் காயமடைந்த 15 பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.