ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்து வருகிறார். இந்நிலையில், அவரது பேட்டிங் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் நிபுணர் ஒருவர் கிளப்பியுள்ள வினோதமான சர்ச்சை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி சதம் விளாசி அசத்தினார். இதைப் பார்த்த பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் ஆய்வாளர் நௌமன் நியாஸ், ‘ஸ்மாஷ் ஹிட்’ (SmashHit) என்ற நிகழ்ச்சியில் பேசுகையில், யார் இந்தச் சிறுவன்? இவன் பேட்டைச் சோதிக்க வேண்டும். வீரர்கள் ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்தப்படுவது போல, இவனை ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும்.

இவன் தனது பேட்டில் ஏதேனும் ‘AI சிப்’ (செயற்கை நுண்ணறிவு சிப்) பயன்படுத்துகிறானா என்று கூடத் தோன்றுகிறது. 18 வயது கூட ஆகாத ஒரு சிறுவன், இவ்வளவு நுட்பமாக 360 டிகிரியிலும் பந்தை விரட்டுவது நம்ப முடியாததாக இருக்கிறது,” என்று கூறியுள்ளார். அதே சமயம், வைபவின் மணிக்கட்டு ஆட்டம் மற்றும் நுட்பமான பேட்டிங் முறையையும் அவர் பாராட்டியுள்ளார்.

இதற்கிடையில் வைபவின் அபார ஆட்டத்தைக் கண்டு அவரை உடனடியாக இந்திய தேசிய அணிக்குத் தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் கார்லோஸ் பிரத்வைட் பிசிசிஐ-க்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி பிரையன் லாராவை எப்படிக் கையாண்டது என்பதை நாம் பார்க்க வேண்டும். அவர் ஒரு மாபெரும் திறமைசாலி என்று தெரிந்தும், அவரை ஜாம்பவான்களுடன் பழக விட்டார்களே தவிர, உடனடியாக சர்வதேச போட்டிகளில் விளையாட வைக்கவில்லை. வைபவ் விஷயத்தில் பிசிசிஐ அவசரம் காட்டக் கூடாது,” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானின் ‘சிப்’ சர்ச்சையும், இந்திய அணியில் சேர்ப்பதற்கான விவாதங்களும் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளன.