ஹரியானா மாநிலம் பரிதாபாதில் வசித்த 16 வயது மாணவன், இங்கு உள்ள பள்ளியில் 11 ஆம்  வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று பள்ளியில் இருந்து வீடு திரும்பிய பின், தன் நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அப்போது அவர்களை பின் தொடர்ந்த சகமாணவர்கள் சிலர் அம்மாணவனுடன் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில், மறைத்து வைத்திருந்த கத்தியால் 11 ஆம் வகுப்பு மாணவனை சரமாரியாக குத்தினர்.

இதனால் சம்பவ இடத்திலேயே அம்மாணவன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தகராறில் ஈடுபட்ட மாணவர்களை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாகவே இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது.