மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாகலட்சுமி என்ற பெண் 100 நாள் வேலைத்திட்டம் வழங்கப்படாததால் மன உளைச்சலில் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு அமுமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மதுரை மாவட்டம்  மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகலட்சுமி என்ற பெண் 100 நாள் வேலைத்திட்டம் வழங்காததால் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகியும் நாகலட்சுமியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் கைது செய்யப்படவில்லை. நாகலட்சுமியின் கணவர் மற்றும் அவருடைய 5 மகள்களும் ஆதரவற்ற நிலையில் இருக்கிறார்கள். பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது பற்றி வாய் கிழிய பேசும் இந்த அரசு நாகலட்சுமிக்கு ஆட்சியர் வழங்கிய பொறுப்புக்கு கவுன்சிலர்கள் எதிர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டின் மீதும் தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கும் என்ன காரணம். நாகலட்சுமி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு அவர்களது குடும்பத்திற்கு உரிய சட்ட உதவிகளை வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.