பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் தாலுகாவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சரத்குமாருக்கும், சமத்துவபுரம் ரோட்டைச் சேர்ந்த பட்டதாரியான மீராவுக்கும்(22) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது மீராவின் பெற்றோர் வரதட்சணையாக நகை மற்றும் சீர்வரிசை வீட்டு உபயோக பொருட்களை கொடுத்துள்ளனர். திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் சரத்குமார் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார். இதனால் மீரா தனது கணவரின் வீட்டில் வசித்து வந்தார். இதனையடுத்து குடும்ப தகராறு ஏற்பட்டதால் 5 மாதங்கள் கழித்து மீராவை அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில் வெளிநாட்டில் இருக்கும் சரத்குமார் தனது மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மீரா கடந்த 18-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மீரா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 10 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.