மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மாவட்டம், கேடி சாவ்லிகட் (Khedi Sawligarh) கிராமத்தில் கேட்பதற்கே நடுக்கம் தரும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் எதிர்பாராத விதமாகத் தேனீக்களின் கூட்டத்திற்கு இலக்கானார். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை அந்தத் தேனீக்கள் அவரை விடாமல் துரத்தித் துரத்திக் கொட்டியுள்ளன. தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவர் ஊருக்குள் ஓடிவந்தும், அங்கே இருந்தவர்களால் கூடத் தேனீக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆக்ரோஷமான தேனீக்களிடம் இருந்து தப்பிக்க, வேறு வழியின்றி அவர் அந்தப் பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டியில் குதித்தார். ஆனால், நீரிலும் விடாமல் தேனீக்கள் அவரைச் சூழ்ந்து தாக்கியது காண்போரைப் பதற வைத்தது. ​சிறிது நேரத்திற்குப் பிறகு தேனீக்கள் தானாக விலகிச் சென்றன. உடனே கிராம மக்கள் அந்த இளைஞரை மீட்டனர். அவரது உடல் முழுவதும் நூற்றுக்கணக்கான தேனீக்களின் கொட்டுகள் இருந்தன.

ரத்தமும், காயமுமாகத் துடித்த அவரை, குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடலில் அளவுக்கு அதிகமான விஷம் ஏறியதால் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியே தற்போது பீதியில் உறைந்துள்ளது.