மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த சில தினங்களாக நள்ளிரவிலும் நீடித்த கனமழை காரணமாக, நகரின் தாழ்வான பகுதிகள் மற்றும் முக்கியச் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக, மும்பையின் காஞ்சூர் மார்க் பகுதியில் கொட்டித் தீர்த்த பெருமழையால், ரயில் தண்டவாளங்கள் அனைத்தும் முழுமையாகத் தண்ணீரில் மூழ்கின. இதன் காரணமாக, அப்பகுதியில் இயக்கப்படும் உள்ளூர் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டும், கடும் தாமதத்துடனும் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இத்தகைய இக்கட்டான சூழலிலும், தண்டவாளங்களை வெள்ள நீர் சூழ்ந்திருந்ததைக் பொருட்படுத்தாமல் இந்தியாவின் அதிவேக ரயிலான ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் சற்றும் வேகம் குறையாமல் சீறிப்பாய்ந்தது. தேங்கியிருந்த தண்ணீரை இருபுறமும் கிழித்துக் கொண்டு அந்த ரயில் முன்னேறிச் சென்றபோது, பல அடி உயரத்திற்குப் பீறிட்டு எழுந்த வெள்ள நீர் அங்கிருந்த மேம்பாலம் வரை சென்று சிதறியது.

 

இந்த பிரமிக்க வைக்கும் காட்சியை அங்கிருந்தவர்கள் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். தற்போது லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்து வைரலாகி வரும் இந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள், பருவமழை காலங்களில் மும்பையின் அசைக்க முடியாத கம்பீரத்திற்கு இந்த வந்தே பாரத் ரயில்தான் மிகச்சிறந்த அடையாளம் எனப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.