கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அரசுப் பள்ளிகள் சில மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறையை அடுத்த இரு இடங்களில் செயல்பட்டு வந்த அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில், இந்த கல்வி ஆண்டில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. இதன் காரணமாக, வேறு வழியின்றி கல்வித்துறை அதிகாரிகள் இந்த இரண்டு பள்ளிகளையும் தற்காலிகமாகப் பூட்டியுள்ளனர்.

இருப்பினும், இந்த பள்ளிகளை நிரந்தரமாக மூடும் எண்ணம் அரசிடம் இல்லை என்றும், வரும் ஜூலை மாத இறுதிக்குள் யாராவது புதிய மாணவர்கள் சேர்க்கைக்கு வந்தால் உடனடியாக பள்ளிகளைத் திறந்து மீண்டும் வகுப்புகளைத் தொடங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து வரும் அவல நிலையை இந்தச் சம்பவம் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.