நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ராமலட்சுமி (40) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் சண்முகசுந்தரம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தன்னுடைய இரு குழந்தைகளுடன் ராமலட்சுமி தனியாக வசித்து வருகிறார். இதில் ராமலட்சுமி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு தன்னுடைய குழந்தைகளை தன் தாயார் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ராமலட்சுமி வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது முகமூடி அணிந்த 3 பேர் கொண்ட மர்மகும்பல் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதனால் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த ராமலட்சுமி கூச்சலிட்டுள்ளார். இதனால் மர்ம நபர்கள் அவரை மிரட்டி கை மற்றும் கால்களை கயிறால் கட்டி போட்டுள்ளனர். அதன் பிறகு வீட்டில் இருந்த 6 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இது குறித்த தகவலின் பேரில் பாளையங்கோட்டை குற்றபிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதன் பிறகு இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.