சென்னை மாதவரம் அருகே அகரம் பகுதியில் பிரவீன் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணமாகி தேவி (24) என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் அந்த பகுதியில் வேலை பார்ப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வந்துள்ளார். அப்போது அந்த வாலிபருக்கும் தேவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த வாலிபர் சொந்த ஊருக்கு வந்துவிட்ட நிலையில் நேற்று முன்தினம் தேவி அவரை பார்ப்பதற்காக அங்கு சென்றுள்ளார்.

இதனால் அந்த வாலிபர் மிகவும் அதிர்ச்சியடைந்த நிலையில் அவரின் குடும்பத்தினர் தேவிக்கு அறிவுரை கூறினர். இதைத்தொடர்ந்து அவரை திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பிறகு காவல்துறையினர் தேவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து அவரை அழைத்துச் செல்லுமாறு கூறினர்.

அதோடு திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் ஒரு காப்பகத்தில் அவரை தங்க வைத்தனர். இந்த பிரச்சினைகளால் மன அழுத்தத்தில் இருந்த தேவி நேற்று அதிகாலை காப்பகத்தின் முதல் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதில் அவருக்கு இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக திண்டுக்கல் வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.