ஹைதராபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் வியாழக்கிழமை பிற்பகலில் நடக்க, அதற்கான சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

உயிரிழந்தவர் கம்மம் மாவட்டம், சிங்கரேணி மண்டலத்தைச் சேர்ந்த 45 வயதான பராசா ஆனந்த நாகேஸ்வர ராவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்த நாள் அதிகாலையில் தனது வழக்குகள் தொடர்பாக ஹைதராபாத் உயர் நீதிமன்றத்திற்கு வந்த நாகேஸ்வர ராவ், வழக்கு கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சு வலியால் மயங்கி விழுந்தார்.

அருகிலிருந்த வழக்கறிஞர்கள், ஊழியர்களிடம் தகவல் தெரிவித்து உடனடியாக அவருக்கு முதலுதவி வழங்கினர். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இதேபோன்று கடந்த பிப்ரவரியில் 66 வயது வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் வாதிடும் நேரத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்திருந்தது. தொடர்ச்சியாக நடக்கும் இத்தகைய சம்பவங்கள் நீதிமன்ற வளாகத்திலுள்ள உடல்நல மேலாண்மையின் அவசியத்தை எடுத்துரைக்கின்றன.