மத்தியப்பிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள இடார்சி இரயில் நிலையத்தின் வெளிச் சிக்னல் அருகே வியாழக்கிழமை அன்று ஒரு கொடூரமான விபத்து நிகழ்ந்துள்ளது.

மேலும் நேபாளத்தைச் சேர்ந்த 28 வயதான பகதூர் என்ற வாலிபர், தனது மனைவி நேகா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கோவாவிற்கு வேலைக்காக மங்களா எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். பயணத்தின் போது அவரது மனநிலை மற்றும் நடத்தை திடீரென அசாதாரணமாக மாறியதாகக் கூறப்படுகிறது.

“>

இந்நிலையில், இரயில் இடார்சி நிலையத்தைத் தாண்டி சிக்னலுக்காக நிறுத்தப்பட்ட போது, அவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு முன்பாகவே திடீரென இரயிலின் கூரை மீது ஏறியுள்ளார். கீழே இருந்த பயணிகள் மற்றும் இரயில்வே ஊழியர்கள் அவரைக் கீழே இறங்குமாறு சத்தமிட்டு எச்சரித்த போதிலும், அவர் இரயிலின் மேல் இருந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பியை நோக்கித் தன் கையை நீட்டியுள்ளார்.

அதோடு அவர் மின்சாரக் கம்பியைத் தொட்ட அடுத்த கணமே, பயங்கர சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டு அவர் இரயில் கூரையிலிருந்து தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் பகதூர் சுமார் 70 சதவீதத்திற்கும் மேல் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளாகி, தற்போது அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கணவரின் இந்த விபரீத செயலைக் கண்டு அவரது மனைவியும் குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே கதறி அழுதது அங்கிருந்தவர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இச்சம்பவம் குறித்த நேரடி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், இரயில்வே போலீஸார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.