அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் பல பகுதிகளிலிருந்து விமான சேவை பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தொடங்கப்படும் இடம் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று பகல் 12.40 மணிக்கு புறப்படும் விமானம் பிற்பகல் 3.15 மணிக்கு அயோத்தி சென்றடையும். இதில் பயணிப்பதற்கான கட்டணம் 7000 ரூபாய் வரை வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான முன்பதிவு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தொடங்கியது.

ஆனால் முன்பதிவு தொடங்கிய போது நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் நேரம் செல்ல செல்ல முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் தற்போது விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி இன்று அயோத்திக்கு சென்று வர ஒருவருக்கு 52,134 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் அயோத்திக்கு செல்லும் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து குறைந்த கட்டணத்தில் அயோத்திக்கு பக்தர்களை அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.