திருமணத்திற்காக இரண்டு தனி விமானங்கள், ஜெய்ப்பூரில் ரூ.17 கோடியில் பிரம்மாண்ட அரண்மனை என மிக ஆடம்பரமாகத் திருமணம் நிச்சயமாகியிருந்த நிலையில், தனது கள்ளக்காதலனுக்காகப் புது மாப்பிள்ளையைக் கோட்டையிலிருந்து தள்ளி கொடூரமாகக் கொலை செய்த இளம் பெண் சியா கோயல், போலீஸ் பிடியில் சிக்கி முதல்முறையாகக் கேமரா முன்னால் வந்துள்ள நெஞ்சை உலுக்கும் செய்தி இணையதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

ஜூன் 18 அன்று தொழிலதிபர் கேதன் அகர்வால் என்ற வாலிபர் லோஹ்கட் கோட்டையிலிருந்து (Lohagad Fort) கீழே விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்தார். ஆரம்பத்தில் இது ஒரு விபத்து என்று சியா கோயல் நாடகமாடிய நிலையில், போலீசாரின் தீவிர விசாரணையில் சியா தனது கள்ளக்காதலன் சேத்தன் சௌத்ரியுடன் சேர்ந்து, கேதனை கோட்டையின் உச்சியிலிருந்து தள்ளிக் கொலை செய்தது அம்பலமானது.

இந்த மெகா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சியா கோயலை, ஞாயிற்றுக்கிழமை காலை லோஹ்கட் கோட்டைக்குக் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்த அதிகாரிகள், குற்றச் சம்பவத்தை அவர் எப்படி அரங்கேற்றினார் என்பது குறித்து ‘சீன் ரிக்ரியேஷன்’ (Scene Recreation) செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது வெள்ளை நிற சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்து, முகத்தை மாஸ்க்கால் மூடியபடி போலீஸ் வாகனத்தில் ஏறிய சியாவின் பரிதாப தோற்றம் முதல்முறையாகக் கேமராவில் பதிவாகியுள்ளது. வெறும் 10 நாட்களுக்கு முன்பு வரை கோடீஸ்வர வாழ்க்கையை வாழ்ந்து, சொகுசு திருமணக் கனவில் மிதந்த சியா மற்றும் அவரது காதலன் சேத்தன் ஆகிய இருவருமே தற்போது கம்பி எண்ணி வரும் நிலையில், இந்த வீடியோ சோசியல் மீடியாவில் நெட்டிசன்களிடையே பயங்கர விவாதப் பொருளாக மாறியுள்ளது.