பஞ்சாப் மாநிலம் பட்டியாலா பகுதியில் உள்ள பூபிந்தர் சிங் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த முதலாம் ஆண்டு மாணவர் நேற்று முன்தினம் விடுதி அறையில் இறந்து கிடந்தார். இவரது சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில் முடிவுகள் வெளியாகி உள்ளது.

அதன்படி இறந்த மாணவரின் நுரையீரலுக்குள் கார்பன்டை ஆக்சைடு மற்றும் ஆக்ஸிஜனின் மோசமான பரிமாற்றத்தால் சுவாச அழுத்தம் ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவரின் உடலில் உள்ள அடையாளங்கள் அவர் போதைப் பொருள் அதிகம் எடுத்துக் கொண்டாரா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளதாகவும் இதனை கண்டுபிடிக்க உள்ளுறுப்பு மாதிரிகள் எடுத்து அரசு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.