உலகிலேயே மிகவும் விசுவாசமான விலங்காகக் கருதப்படும் நாய், வயதாகி தளர்ந்துபோன காரணத்திற்காக அதன் சொந்த உரிமையாளர்களாலேயே குப்பை பையில் அடைக்கப்பட்டு ஓடும் கால்வாயில் வீசப்பட்ட கொடூர சம்பவம் இங்கிலாந்தின் லங்காஷயர் பகுதியில் அரங்கேறியுள்ளது. அதாவது அந்த கால்வாய் அருகே டெரென்ஸ் பாய்ட் (34), சேடி பாய்ட் (32) என்ற தம்பதி ஒரு கருப்பு நிற குப்பைப்பையை கையில் எடுத்துக்கொண்டு சந்தேகத்திற்கிடமாக நடந்து வந்துள்ளனர். திடீரென அந்தப் பையை அவர்கள் கால்வாயின் ஆழமான தண்ணீருக்குள் தூக்கி வீசியுள்ளனர்.
அங்கு தனது நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்து வந்த ஒருவர், “பைக்குள் என்ன இருக்கிறது?” என்று கேட்டபோது, அந்த தம்பதி “பழைய துணிகள்” என்று பொய் கூறிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். ஆனால், அடுத்த சில நொடிகளில் தண்ணீரில் மிதந்த அந்தப் பை அசையத் தொடங்கி, அதற்குள்ளிருந்து ‘மேடி’ என்ற வயதான டெரியர் வகை பெண் நாயின் தலை வெளியே வந்துள்ளது. இதைப் பார்த்த அங்கிருந்த ஒருவர், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தண்ணீரில் குதித்து அந்த நாயைக் காப்பாற்றி வெளியே கொண்டு வந்தார்.
கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட மேடியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், தீயணைப்பு மற்றும் போலீசார் உதவியுடன் உடனடியாக விலங்குகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு மேடியை பரிசோதித்த மருத்துவர்கள், அதன் உடல் வெப்பநிலை 33.2 டிகிரி செல்சியஸாகக் குறைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், அது கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்ததுடன், அதன் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்களும், தசைகள் உதிர்ந்த நிலையிலும் காணப்பட்டது.
தீவிர சிகிச்சை அளித்தும் மேடியின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து, மூளை பாதிப்பு ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்டதால், அதன் கடுமையான வலியைத் தாங்க முடியாமல் மருத்துவர்கள் கனத்த இதயத்துடன் அதனை ‘கருணைக்கொலை’ செய்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் அந்த தம்பதியின் வீட்டிற்குச் சென்று சோதனையிட்டபோது, வீடு முழுவதும் விலங்குகளின் மலம் பரவியும், சமையலறையில் எலிகள் ஓடிக்கொண்டும் இருந்தன.
அங்கிருந்து ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருந்த 7 பூனைக்குட்டிகளையும், ஒரு பாம்பையும் போலீசார் மீட்டனர். அதில் ஒரு பூனைக்குட்டி பின்னர் இறந்தது. சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த இரக்கமற்ற தம்பதிக்கு 8 வாரங்கள் சிறைத்தண்டனை விதித்து, பின்னர் அதை 12 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்தது. மேலும், 5 ஆண்டுகளுக்கு எந்த விலங்கையும் வளர்க்கக் கூடாது எனத் தடை விதித்துள்ளது. எனினும், அந்த கொடூர தம்பதிக்குச் சிறைத்தண்டனை கிடைக்காததால் உள்ளூர் பொதுமக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
