வங்கி கணக்குல இருந்து திடீரென்று ஒரு தொகை கழிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்கள். ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டணம் மற்றும் இதர சேவை கட்டணம் என 20 ரூபாய் 50 ரூபாய் வசூலிக்கப்பட்டாலும் பரவாயில்லை. ஆனால் நூற்று கணக்கில் பணம் காணாமல் போவதாக புகார் அளிக்கிறார்கள். வங்கி வாடிக்கையாளர்களிடம் திடீரென்று 295 வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த பணம் ஏன் பிடிக்கப்பட்டது என்று அவர்களுக்கே தெரியவில்லை.  உண்மையில் இந்த பணம் கடன் இஎம்ஐ தொகையை உரிய தேதியில் செலுத்தவில்லை என்பதால் தான் வசூலிக்கப்படுகிறது.  வங்கிகளில் வீட்டு கடன் அல்லது வேறு ஏதாவது கடன் எடுத்திருந்தால் அதற்கான இஎம்ஐ தொகை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட ஒரு தேதியில் உங்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே எடுத்துக் கொள்ளப்படும்.

சரியான தேதியில் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றால் அதற்கு 250 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இதனுடன் சேர்த்து 18 சதவீதம் ஜிஎஸ்டியாக 45 ரூபாய் கொடுக்க வேண்டும். ஆக மொத்தம் 295 ரூபாய் வங்கிக் கணக்கில் இருந்து அபராதத் தொகையாக வசூலிக்கப்படுகிறது. சில வங்கிகள் இந்த அபராதத் தொகையை மாதந்தோறும் வசூலிக்கின்றன. ஆனால் சில வங்கிகள் பல மாதங்கள் சேர்த்து ஒரே அடியாக எடுத்துக் கொள்கின்றன.