வங்கக்கடலின் தென் கிழக்கு பகுதியில் உருவாகி இருக்கும் புயல் சின்னம் மோக்கா புயலாக அடுத்த வாரம் வலுவடையக்கூடும் என இந்திய வானிலை மையம் கணித்து உள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை மையத்தின் தலைமை இயக்குநா் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறியதாவது, “வங்கக்கடலின் தென் கிழக்கு பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தீவிர புயல் உருவாவதற்கான முதற்கட்டமாக கருதப்படும் இந்த சுழற்சியின் தாக்கத்தால், இதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை மே 8-ஆம் தேதி உருவாகக்கூடும். இது வலுப்பெற்று மே 9-ஆம் தேதி புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த புயல் மேலும் தீவிரமடைந்து மத்திய வங்கக்கடல் பகுதி நோக்கி நகரக்கூடும் என்று கூறினார். நடப்பு ஆண்டில் முதலாவதாக உருவாகும் இந்த புயலுக்கு யேமன் நாடு அளித்த “மோக்கா” என பெயா் சூட்டப்படுகிறது.