ரோகினி திரை அரங்கத்தில் வெளியே ட்ரெய்லர் வெளியிட எந்த அனுமதியும் கோரவில்லை என்று ஐகோர்ட்டில் போலீஸ் விளக்கமளித்துள்ளது.

சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்துவதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனு இன்றைய தினம் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த போது, மதுரை ஐகோர்ட்டில் கடந்த மாதம் அளித்த மனுவை பரிசீலிக்காமல் வைத்து கடைசி நேரத்தில் மனுவை நிராகரித்ததாகவும், ஒவ்வொரு முறையும் காவல்துறை இதுபோல செய்வதாக குற்றம் சாட்டினர். காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆர் எஸ் எஸ் பேரணிக்கு அனுமதி கோரும் சாலையில் மசூதிகள், தேவாலயம், மற்றும் பிற  அரசியல் கட்சி அலுவலகங்கள் உள்ளதாகவும்  குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி அப்படி என்றால் அந்த பகுதியில் யாரும் நடத்தக்கூடாது என்று கூறுகிறீர்களா? என கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து அனுமதி கோரும்  ஆர்எஸ்எஸ் மனுவிற்கு பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி அக்டோபர் 11ஆம் தேதிக்கு வழக்கினுடைய விசாரணைக்கு ஒத்திவைத்து, இது போன்ற விவகாரங்களில் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்காமல் கட்டுப்பாடுகள் விதித்தும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் உத்திரவாதம் பெற்றுக் கொண்டும் அனுமதி அளிக்கலாம் என யோசனை  தெரிவித்தார். மேலும் லியோ படத்தினுடைய ட்ரெய்லர் வெளியிட்டபோது ரோகிணி திரையரங்கம் சேதப்படுத்தப்பட்டதற்கும், ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் பாதுகாப்பு உள்ளிட்ட குளறுபடிகள் ஏற்பட்டதற்கு காவல்துறையினர் தவறான கையாளுதல் காரணம் எனவும் அதிருப்தி தெரிவித்தார்.

பின்னர் இது குறித்து ஆஜராகி விளக்கம் அளித்த தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது அலி ஜின்னா, லியோ டிரெய்லர் ரோகினி திரையரங்கில் வெளியில் திரையிடுவது தொடர்பாக அனுமதிக்கோரி எந்த விண்ணப்பமும் அளிக்கவில்லை எனவும், அவ்வாறு அனுமதி கோரியிருந்தால், பரிசீலிக்கப்பட்டு இருக்கும் என்று விளக்கமளித்தார்.

திரையரங்கிற்கு உள்ளே லியோ டிரெய்லர் வெளியிட எந்த அனுமதி பெற தேவையில்லை எனவும் குறிப்பிட்டார். எனினும் லியோ படத்தின் இசை வெளியீட்டின் போது, ஏஆர் ரகுமான் இசை  நிகழ்ச்சியின் போது போலி டிக்கெட்டுகள் மூலமாக ரசிகர்கள் குவிந்து விடாமல் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தியதால் அந்த நிகழ்ச்சியை ஏற்பாட்டாளர்களே ரத்து செய்துவிட்டதாகவும், லியோ படத்தினுடைய ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கும், காவல்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், தற்போது அனுமதி கோரினால் கூட பரிசீலிக்க தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

திரையரங்கில் இருக்கைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு எந்த புகாரும் வரவில்லை எனவும், புகார் இல்லாமல் நடவடிக்கை எடுத்தால் விஜய் ரசிகர்களுக்கு எதிராக செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடும் எனவும், காவல்துறையை  பொறுத்தவரை எந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி மறுப்பதில்லை எனவும் தெளிவுபடுத்தினார்.

அதற்கு பதில் அளித்த நீதிபதி, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை பற்றி தான் நீதிமன்றம் கவலை தெரிவித்ததாகவும், பத்திரிகைகளில் செய்தி வெளியானதால் இதுகுறித்து கேள்வி எழுப்பியதாகவும், ரசிகர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கி அவர்களை முறையாக கையாண்டிருக்க வேண்டும் என நீதிபதி கூறினார்.

ரசிகர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கி அவர்களை முறையாக கையாண்டிருக்க வேண்டும் என நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். சேலம், கிருஷ்ணகிரியில் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய வழக்கில் ஐகோர்ட் நீதிபதி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.