ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே வெடித்துள்ள நேரடிப் போர், தற்போது உலகளாவிய எரிசக்தி நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவின் தலையீட்டால் நிலைமை மோசமடைந்துள்ள நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் மகிழ்ச்சியாக நடனமாடும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் தனது எல்லைக்குள் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதனைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் அதிரடியாக மூடியுள்ளது.

இதன் காரணமாக உலக நாடுகளுக்குச் செல்லும் கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி (LPG) எரிவாயு விநியோகம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. பல நாடுகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளதுடன், பெட்ரோல், டீசல் விலையும் விண்ணைத் தொட்டுள்ளது. சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் உணவகங்கள் மூடப்பட்டு, பொதுமக்கள் வீதிக்கு வந்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் டொனால்ட் டிரம்ப் எடுத்த முடிவுகள் மிகப்பெரிய தவறு என்று உலகத் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். அமெரிக்கா போன்ற வல்லரசு நாடு களத்தில் இருந்தும், எந்தவொரு நாடும் டிரம்பிற்கு ஆதரவாக முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேவையற்ற போரினால் உலகப் பொருளாதாரம் பல ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உலகமே எரிசக்தி தட்டுப்பாட்டாலும், போர் அச்சத்தாலும் நடுங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையின் பால்கனியில் நின்றபடி உற்சாகமாக நடனமாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவைக்கண்டு கொதிப்படைந்த சமூக வலைதளவாசிகள், “உலகமே பற்றி எரியும்போது, டிரம்ப் வேடிக்கை பார்க்கிறார்” என்றும், “சவூதியின் சுல்தான் விமானப்படை தளம் மீதான தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உயிரிழந்த நிலையிலும், அதிபர் இப்படி பொறுப்பற்று ஆடுகிறாரே” என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும் ஈரானில் நிலைமை மிகவும் மோசமடைந்து வரும் சூழலில், உடனடியாகப் போரை நிறுத்தி அமைதிக்குத் திரும்ப வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலக அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த எரிசக்தி நெருக்கடியிலிருந்து மீள இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.