ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு சார்பாக மலிவு விலையிலும், இலவசமாகவும் உணவு தானிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் நிறைய உதவிகள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தினை நிறைய பேர் தவறாக பயன்படுத்துகின்றனர். ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி அவற்றை கள்ள சந்தையில் விற்பனை செய்யும் மோசடிகள் அதிகரித்து வருகிறது.

ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. இதனை தடுப்பதற்காக தமிழக அரசு சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக தமிழக அரசு பொது விநியோகத் திட்டம் சிறப்பு வினியோகத் திட்டம் போன்றவற்றின் மூலமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடைகள் மூலமாக அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது.

இதனை பலர் முறைகேடாக கள்ள சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். உணவுப்பொருள் வழங்கல்  மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்கள் மற்றும் குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை அலுவலர்கள் போன்றோர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு கடத்தல் மற்றும் பதுக்கல்  தொடர்பான தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீது இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1955 இன் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 19.12.2022 முதல் 25.12.2022 வரை உள்ள ஒரு வார காலகட்டத்தில் கள்ளச் சந்தையில் விற்க முயற்சி செய்த ரூ.12,29,240 மதிப்புள்ள 2017 குவிண்டால்  பொது விநியோகத் திட்ட அரிசி மற்றும் மண்ணெண்ணெய் 249 லிட்டர், துவரம்பருப்பு 145 கிலோ கிராம், 24 எரிவாயு உருளை போன்றவையும் அந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 82 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 225 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.