டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை மாற்றியது மத்திய அரசு..

சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவை ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்று கொண்டாடும் வகையில், ராஷ்டிரபதி பவன் தோட்டங்களுக்கு ‘அம்ரித் உத்யன்’ என இந்தியக் குடியரசுத் தலைவர் பொதுப் பெயரை சூட்டியுள்ளார் என  குடியரசுத் தலைவரின் துணை செய்தித் தொடர்பாளர் நவிகா குப்தா தெரிவித்துள்ளார். ‘அம்ரித் உத்யன்’ ஜனவரி 31, 2023 முதல் பொதுமக்களுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முகல் தோட்டம் என்று இருந்த பெயரை அம்ரித் உத்யன் என மாற்றியது மத்திய அரசு. ஆங்கிலேயர் ஆட்சி கால ஆதிக்க அடையாளங்களை மாற்றும் வகையில் பெயர் மாற்றம் என மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. அம்ரித் உத்யன் தோட்டத்தை மக்களின் பார்வைக்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை திறந்து வைக்க உள்ளார்.

இதனைத்தொடர்ந்து டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முகல் தோட்டத்தின் பெயரை மாற்றியதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மதரீதியாக சமூகத்தை பிரிக்கும் செயல் எனவும், பெயர் மாற்றத்தின் மூலம் பிற மதத்தினர் மீது வெறுப்புணர்வை விதைப்பதாகவும் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது..