தமிழகத்தில் கடந்த மே மாதம் வெளியான தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜக முற்றிலும் காணாமல் போய்விட்டது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி விமர்சித்துள்ளார்.

மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை எள்ளி நகையாடிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அவர் காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஒரே ஒரு தொகுதியில் மட்டும் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ள பாஜக, கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று சாடியுள்ளார். கர்நாடகத்தில் எடியூரப்பா போன்ற பாஜக தலைவர்கள் தமிழக எல்லை வரை வந்து அணை கட்டப் போராடியதை மக்கள் மறக்கவில்லை என்றும், இரு மாநிலங்களுக்கு இடையே மோதலை உருவாக்குவதே மத்திய மோடி அரசுதான் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

ராகுல் காந்தியோ, மல்லிகார்ஜுன கார்கேவோ தற்சமயம் ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்பதை நயினார் நாகேந்திரன் புரிந்து கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள தாகூர், முடிந்தால் அணை கட்ட மாட்டோம் என்று கர்நாடக பாஜகவிடம் நயினாரால் கடிதம் வாங்கித் தர முடியுமா என்றும் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

மேலும், தவெக அரசு மீது வழக்கறிஞர்கள் நியமனத்தில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் நயினாருக்குப் பதில் சொல்லிய அவர், அயோத்தி ராமர் கோவில் காணிக்கையைத் திருடிய சங்பரிவார் கும்பலின் பின்னணியைக் கொண்ட பாஜக ஊழல் பற்றிப் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்குச் சமம் என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

ஊழல் பற்றிப் பேசும் முன் பாஜக தலைவர்கள் தங்களைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்வது நல்லது, இல்லையென்றால் அசிங்கப்பட்டு போவீர்கள் என்றும் மாணிக்கம் தாகூர் எச்சரித்துள்ளார்.