மும்பையில் மெட்ரோ ரயிலின் மூடியக் கதவுகளில் பெண் ஒருவரின் ஆடை சிக்கிக்கொண்டதால், ரயில் அவரை இழுத்து சென்ற சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது ஓடும் ரயில், அப்பெண்ணை நடைமேடையின் நுனிக்கு இழுத்துச் சென்றது. கடந்த அக்..21 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாலை 4:10 மணியளவில் சாகலா ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் பெட்டியின் கதவுகளுக்கு இடையில் டிரஸ் சிக்கிய நிலையில், பெண் ஒருவர் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முயல்வதை வீடியோவில் காணலாம். அப்போது அருகில் நின்றிருந்த பயணி ஒருவர் காப்பாற்ற முயன்ற நிலையில் அது பலனளிக்காமல் அந்த பெண் ரயிலுடன் இழுத்துச்செல்லப்பட்டார்.

அதன்பின் அந்த பெண் பிளாட்பாரம் தண்டவாளத்தின் முனைக்கு இழுத்துச் செல்லப்பட்டார். அதனை தொடர்ந்து காயமடைந்த பெண்  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவ்வாறு காயம் அடைந்த பெண் கவுரி குமாரி சாஹு என அடையாளம் காணப்பட்டார். அதன்பின் அவரது மருத்துவச் செலவுகளை மும்பை மெட்ரோ ஒன் நிர்வாகமானது ஏற்றுக் கொண்டது.