டைரக்டர் ஷங்கர் இயக்கிய “எந்திரன்” திரைப்படம் கடந்த 2010-ம் வருடம் ரிலீஸ் ஆனது. இதில் ரஜினி, ஐஸ்வர்யாராய், சந்தானம், கருணாஸ், கொச்சின் அனீபா, கலாபவன் மணி உட்பட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரத்தினவேலு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படம் ஹாலிவுட்டில் வெளியாகிய “ரோபோ” படத்தின் இன்ஸ்பிரஷனில் உருவாகியிருந்தது. மேலும் இப்படத்தின் கதையானது என்னுடையது என ஆரூர் எழுத்தாளர் தமிழ்நாடன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 1996-ம் வருடம் “இனிய உதயம்” என்ற மாத இதழில் தான் எழுதிய திக் திக் தீபிகா என்கிற கதையைத்தான் ஷங்கர் “எந்திரன்” படமாக எடுத்துள்ளார் என தன் மனுவில் அவர் தெரிவித்திருந்தார். கடந்த சில வருடங்களாக நடந்து வந்த இவ்வழக்கை இப்போது நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதாவது, திக் திக் தீபிகா கதையும், எந்திரன் கதையும் ஒன்றல்ல. ஆகவே காப்புரிமை சட்டப்படி இதில் நடவடிக்கை எடுக்க இயலாது என நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.