தமிழில் அஜித் நடித்த வேதாளம் திரைப்படத்தில் வில்லன்களில் ஒருவராக அறிமுகமானவர் தான் நடிகர் கபீர் துஹான் சிங். அப்படத்தை அடுத்து விஜய் சேதுபதியின் றெக்க மற்றும் விஷாலின் ஆக்சன் போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். அதோடு தெலுங்கு திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்தி அவர் பிஸியாக நடித்து வருகிறார்.

திரையுலகில் நுழைந்த இந்த 8 வருடங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் அவர் நடித்துவிட்டார். தற்போது நடிகர் டொவினோ தாமஸ் 3 வேடங்களில் நடித்து வரும் வரலாற்று படமான அஜயன்டே ரெண்டாம் மோஷனம் என்ற படத்தில் கபீர் துஹான் சிங் வில்லனாக நடிப்பதன் வாயிலாக மலையாள திரையுலகிலும் நுழைந்துள்ளார்.

இந்நிலையில் விரைவில் திருமண வாழ்க்கையிலும் அடியெடுத்து வைக்க இருக்கிறார் கபீர் துஹான் சிங். இவருடைய திருமணம் வருகிற ஜூன் 23-ம் தேதி டில்லியில் நடைபெறவுள்ளது. மணப் பெண் சீமா சஹால் ஹரியானாவை சேர்ந்தவர் ஆவார். இவர் ஒரு பள்ளியில் கணித ஆசிரியை ஆக பணியாற்றி வருகிறார். இவர்களது திருமணம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்கும் விதமாக எளிய முறையில் நடைபெறவுள்ளது.