சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் காவல் நிலையத்தில் கணபதி என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வேலை முடிந்து தனது நண்பரான வழக்கறிஞர் மதிவாணன் என்பருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மணலி விரைவு சாலையில் சத்தியமூர்த்தி நகர் அருகே பக்கிங்காம் கால்வாயை கடந்து சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த கணபதியும், மதிவாணனும் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் லாரி டிரைவரான ராஜி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.