கரூர் மாவட்டத்தில் உள்ள வாங்கல் குப்பிச்சிபாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் மலர்க்கொடி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காந்திகிராமம் பகுதியில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகவும், வாங்கல் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் கூடுதல் சத்துணவு அமைப்பாளராகவும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை மலர்கொடி மொபட்டில் வாங்கல் பகுதியில் இருக்கும் அரசு பள்ளிக்கு செல்வதற்காக கரூர்- வாங்கல் சாலையில் வேட்டைக்காரன் புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஞானப்பிரகாசம் என்பவர் ஓட்டி வந்த கார் மலர்க்கொடி ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.

இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த மலர்கொடி மொபட்டுடன் காரின் அடிப்பகுதியில் சிக்கிக்கொண்டார். சிறிது தூரம் தரதரவென இழுத்து சென்று கார் அங்குள்ள மளிகை கடை முன்பு உள்ள இரும்பு தடுப்பு கம்பி மற்றும் சுவற்றில் மோதி நின்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மலர்கொடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று காயமடைந்த ஞானப்பிரகாசத்தை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மலர்க்கொடியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.