தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.பொதுவாகவே மே மாதத்தில் கோடை வெயில் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த வருடம் வழக்கத்தை விட முன்னதாகவே மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் மக்களை சுட்டெரித்தது.

இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் இன்று மே 4-ம் தேதி முதல் 29ஆம் தேதி நீடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் உச்சமடையும். அனல் காற்று வீசும் என கூறப்படுகிறது. அக்னிக்கு முன்பே பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளதால், வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் மே பத்தாம் தேதிக்கு பிறகு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் வரும் ஏழாம் தேதி வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. புயல் கடந்த பிறகு அதாவது மே பத்தாம் தேதிக்கு பிறகு மீண்டும் வெயில் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.