வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகலாந்து மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைவதால் இந்த மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கும், நாகலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரு மாநிலங்களிலும் காங்கிரஸ், பா.ஜனதா போன்ற முக்கிய கட்சிகளும், மாநிலத்தை சேர்ந்த சிறிய கட்சிகளும் கடந்த சில வாரங்களாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தனர். நேற்று முன்தினம் இந்த பிரச்சாரம் முடிவடைந்தது.

இந்நிலையில் இன்று நாகலாந்து, மேகாலயா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் இன்று தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். மேலும் மூத்த வாக்காளர்களும் தங்களது ஜனநாயக கடமையை ஆட்சி வருகின்றனர். இந்த வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் மேகாலயா மற்றும் நாகலாந்தில் இன்றைய தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும்  மார்ச் மாதம் இரண்டாம் தேதி எண்ணபட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.