மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் போவாய் பகுதியில் இந்திய தொழில்நுட்ப கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்குள்ள விடுதியில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தர்ஷன் சோலங்கி என்பவர் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவன் விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தற்கொலை செய்து கொண்ட மாணவனை முதலில் விடுதி காவலர் பார்த்திருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. அப்போது அவரது உடலில் ரத்தம் இருந்ததாகவும் விடுதி காவலர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாணவன் தங்கி இருந்த அறையை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அங்கு தற்கொலை தொடர்பான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. அதனால் இதனை ஒரு விபத்தால் ஏற்பட்ட மரணம் என வழக்கு பதிவு செய்திருப்பதாக மூத்த காவல் ஆய்வாளர்  கூறியுள்ளார்.  இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த மாணவரின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகம் மற்றும் விடுதி நிர்வாகத்திடம் தனித்தனியாக இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.